கனடாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர் தொகை கடந்த மே மாதத்தில் முதல் அலையின் உச்சத்தில் காணப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
அண்மைய நாட்களில் கனடாவில் தினசரி தொற்று நோயாளர் தொகை 6 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருவதுடன், மரணங்களும் அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரம் முழுவதும் கனடாவில் தினசரி தொற்று நோயாளர் தொகை 6 ஆயிரத்துக்கு நெருக்கமாகப் பதிவாக நிலையில் திங்கட்கிழமை 6,103 புதிய தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.
கடந்த வாரத்தில் சனிக்கிழமை நாட்டில் மிக அதிகபட்டமாக 6,488 தொற்றுநோயாளர்கள் பதிவாகினர். ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை மேலும் 6,195 ஆகப் பதிவானது.
தொற்று நோயாளர் தொகை வேகமாக அதிகரித்துவரும் நிலையில் அடுத்த சில நாட்களில் கனடாவின் மொத்த தொற்று நோயாளர் தொகை 4 இலட்சம் என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கொரோனா மரணங்களும் 12,100-ஐ கடந்து அதிகரித்து வருகிறது.
இதேவேளை, தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட சுமார் 3 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 2,545 நோயாளிகள் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.
கடந்த 30 நாட்களில் மட்டும் சுமார் 140,000 பேருக்கு கனடாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது கடந்த ஒக்டோபரில் பதிவான தொற்று நோயாளர் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும்.
நவம்பர் மாதத்தில் கொரோனாவுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 2,000 மரணங்கள் பதிவாகின. தொற்று நோயின் முதல் அலையின்போது தினசரி உயிரிழப்புக்கள் 150 வரை பதிவானபோதும் தற்போது இறப்புக்கள் குறைந்துள்ளன. எனினும் தொற்று நோய் அதிகரிப்புக்கு மத்தியில் மரணங்களும் சீராக உயர்ந்து வருகின்றன.